தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.
இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது.
ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறு குன்றிலும் உள்ளது
மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.
சுற்றிலும் வயல்கள், குளங்கள் நிறைந்து பசுமையாக உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே.
இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.
முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில்.
மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும்.
தல வரலாறு
கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார்.
சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசிப முனிவர், நாரதர், வருணன், சுகோஷன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர்.
இவர்களுடைய தவத்தை மெச்சிய பகவான் விஷ்ணு, ``பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடியபின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை வேண்டித் தவம் இயற்றுக'' என்று கூறி மறைந்தார்.
அதன்படியே முனிவர்களும், தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர்.
அந்த தவத்தில் மகிழ்ந்த பகவான் மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.
கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர்.
பின்னர், இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார்.
அந்த இடம் சோழர்கள் காலத்தில் 'சத்திரிய சிகாமணி' என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.
வடிவச்சிறப்பு
அமைதியான சூழலில், வயல்வெளிகள் நிறைந்த பசுமையான பகுதியில் இந்த ``லட்சுமி நரசிம்மர்'' ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருவது சிறப்பாகும்.
இரண்ய கசிபுவை நரசிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம்.
இரண்யனை தன் மடி மீது கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து, நான்கு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாகப் பிடித்து, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாகக் காட்சி தருகிறார்.
கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்தது.
இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை சேவித்து பிரார்த்தித்தார்.
நரசிம்மரின் உக்ரத்தால் நாலாபக்கமும் பற்றி எரிந்த அந்த தீயில் மகாலட்சுமி இறங்கி வந்து பிரகலாதனை முன்னிட்டு நரசிம்மர் அருகே சென்று சாந்தப்படுத்தினார்.
அந்த தீயை நினைவுகூரவே இன்று சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.
இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது.
இதனைக் குறிக்கும் வகையில் நரசிம்மரின் மார்பில் லட்சுமி பிரதிஷ்டையாகக் காணப்படுகிறார்.
சிங்க கர்ஜனை
சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அங்கு சென்று வழிபட பயந்தனர்.
பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர், பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்தசொரூபியாக மாறி விட்டார் என்றும் கூறுகின்றனர்.
நரசிம்ம தீர்த்தம்
மகா உக்ரமூர்த்தியாக இருக்கும் நரசிம்ம பெருமாளைத் தணிக்கும் பொருட்டு சன்னதி முன்பாக ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டுள்ளது. இது நரசிம்மர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
இறுதியாக சிவபெருமானே சரபப் பறவையாக அவதாரம் எடுத்து நரசிம்மரின் சீற்றத்தை தணிக்க வந்தார்.
ஆனால் நரசிம்மரால் சரபமானது வதம் செய்யப்பட்டு ஒரு பாதி மேருமலையிலும் இன்னொரு பாதி விந்திய மலையிலும் விழுந்தன. அதிலிருந்து மீண்டு வந்த சிவன் நரசிம்மரை சேவித்து அருளை பெற்றார் என்கிறது நரசிம்ம புராணம்.
திருவிழா
நரசிம்ம ஜெயந்தி,
வைகுண்ட ஏகாதசி,
புரட்டாசி சனிக்கிழமை,
சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்கள்.
பிரார்த்தனை
கல்யாணத்தடை,
கடன் தொல்லை,
நீண்டநாள் நோய்,
நீதிமன்ற வழக்கு
போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து வழிபடும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
பால்,
இளநீர்,
அபிஷேகம் செய்தும்,
பானகம்,
நைவேத்யம்,
நீராஞ்சனம் செய்தும் வழிபடலாம்.
ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சிணமாக வந்தால் பிரார்த்தனைகள் உடனே நிறைவேறுகிறது.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில், கீழப்பாவூர் கிராமத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.
தென்காசி - திருநெல்வேலி சாலையில், திருநெல்வேலியில் இருந்து மேற்கில் 32 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது.
இங்கிருந்து வடக்காக சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.
தரிசன நேரம்
காலை 07.30 மணி முதல் பகல் 10.30 மணி வரை
மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
கோவில் முகவரி
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி -627806.
தொலைபேசி
+91-9442330643