ஒரு நிமிடத்தில் இத்தனை பொய்கள் சொல்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. முதலில் திருமுருகாற்றுப்படை 11வது திருமுறையில் 9வது என்கிறார். 11வது திருமுறையில் 16வது இடத்தில் இருப்பது திருமுருகாற்றுப்படை. சரி கணக்கில் வீக் என்று விட்டுவிட்டு மேலே கவனித்தால், உவேசா மீது சேற்றை வீசுகிறார்

அதாவது பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையை உவேசா சேர்த்துவிட்டாராம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நச்சினார்கினியர் முருகாற்றுப்படை உட்பட பத்துப்பாட்டுத் தொகைக்கு உரை எழுதியதும்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் போன்றோர் பத்துப்பாட்டு பாடல்களை மேற்கோள்காட்டியதும் இவருக்கு
தெரியாது போலும். நச்சினார்க்கினியர் உரை எழுதியவைகளைப் பட்டியலிடும் பாடல் பத்துப்பாட்டைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டும் கலியும்
ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே.
சரி பத்துப்பாட்டில் உள்ள நூல்கள் என்னென்ன என்பதை பட்டியலிடும் பழம்பாடலைப் பாருங்கள்

முருகு பொருநாறு பாண் இரண்டு, முல்லை,
பெருகு வள மதுரைக் காஞ்சி, - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும், பத்து.

முதலிலேயே முருகாற்றுப்படை வந்துவிடுகிறது.
இதை உவேசா சேர்த்தார் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். சரி,பத்துப்பாடல் தொகுப்பின் அடிப்படை என்ன. நீண்ட அகவற்பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு.அதன் இலக்கணம்

நூறு அடிச் சிறுமை, நூற்றுப்பத்து அளவே
ஏறிய அடியின் ஈர் ஐம்பாட்டுத்
தொகுப்பது பத்துப்பாட்டு எனப்படுமே
திருமுருகாற்றுப்படை உள்பட அந்தப் பத்துப்பாடல்களுக்குத்தான் இந்த இலக்கணம் பொருந்தி வரும் என்கிறார் இளம்பூரணர்.இதை எழுதிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இதே தொகுப்பில் உள்ள நெடுநல்வாடையையும் எழுதியிருக்கிறார்.இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்
சங்க இலக்கியமான இது ஏன் பின் திருமுறையில் தொகுக்கப்பட்டது என்றால் முருகனுக்கான துதிகளில் சிறப்பு மிக்கதாக இந்நூல் இருந்தது என்பதே அதற்கான காரணம். இரண்டு விநாயகர் துதிப்பாடல்களும் இதே 11ம் திருமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளைத்தான்
தொகுத்தாரம். தான் எழுதிய பாடல்களையும் சேர்த்து நம்பி தொகுத்தது 11 திருமுறைகள். பின்னால் பெரிய புராணம் 12வது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. இப்படி பொய் மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டுபோவதன் காரணம் இந்து மதத்தின் மீதான துவேஷமும் ஒரு சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் தவிர வேறென்ன?

More from All

You May Also Like