🌺நான்.... அம்மா.... 🌺
குட்டைப் பாவாடையும் ரெட்டை ஜடையும் போட்டுத் துள்ளி விளையாடிய காலம். சின்ன வயது முதல் ஏனோ அப்பா, தம்பி, படிப்பு, விளையாட்டு.... நான்கு மட்டுமே உலகமென வளர்ந்தேன். உலகம் என்பதே அப்பாதான் அப்போது எனக்கு.
திருவிழா பார்க்கப் போனேன் அப்பா தோளில். திரும்பி வரும்வரை அதில் குதித்து ஆட்டம் போட்டது இன்றும் நினைவில் ஓடி வருகிறது.
அவர் போகும் இடமெல்லாம்... கோவில், பட்டிமன்றம், நூலகம், அரசியல் கூட்டம் என எல்லா இடத்திலும், ஒரு ஒற்றை விரல் பற்றி நானும் ஒட்டிக் கொண்டே போவேன்.
மடியில் உட்கார வைத்து, கதை சொல்லியபடி பிஞ்சு விரலில் மருதாணி இட்டுக் கொஞ்சுவார். அப்பாவின் முத்தத்துக்காகவே சமத்துக் குட்டியாய் இருப்பேன்....
"ஏந்தான் இப்படி இருக்கீங்களோ? நாளைக்கு ஆஃபீஸுல உங்க கையைப் பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?"
என அம்மா சத்தமாக ஒரு குரல் கொடுப்பாள்.
ஏனோ அவர் காதுகளுக்கு அது விழவே விழாது. இரு கை, கால்களிலும் மருதாணி வைத்து, தன் நெஞ்சில் படுக்க வைத்துத் தட்டுவார். அவரது மெல்லிய ரோமம் குறுகுறுக்கும்... அழுவேன்... ஓடிப்போய் சட்டை போட்டு வந்து, என்னை சாய்த்துக் கொள்ளும் அந்த மார்பு.
காலை எழுந்ததும், மருதாணியை அலம்பி, அதில் தேங்காய் எண்ணெய் வைத்து, என்னைக் குளிப்பாட்டி, தலைவாரிக் கட்டிக் கொஞ்சும் அப்பாவின் அந்த முரட்டு அரவணைப்புக்காகவே, அடிக்கடி மருதாணி கேட்டு அழுதது இன்றும் மறக்கவில்லை.
தம்பிக்கும் இதையெல்லாம் நான் செய்து மகிழ்வேன்.